சொன்னவர் அடியவன் எழுதியது இறைவன்!
ADDED :4537 days ago
மகாபாரதத்தை வியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதியதாக வரலாறு உண்டு. அதுபோல், தேனினும் இனிய திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல, தில்லையம்பல சிவனே எழுதினார். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத் தேனை சுவைத்த சிவன், மானிட வடிவில் அவர் முன் வந்தார். சுவாமி! தாங்கள் சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடியுள்ளதாக அறிந்தேன். அது உலகம் உள்ளளவும் நிலைக்க வேண்டாமா! எனவே, அதை எழுத்தாக வடிக்க வேண்டும், என்றார். மாணிக்கவாசகரும் தன்னை மறந்து அந்தப் பாடல்களைப் பாட, தில்லை அம்பலத்தானே அவற்றை எழுதினார். அந்த பிரதியின் கடைசியில், மாணிக்க வாசகர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் எழுதியது திருச்சிற்றம்பலம் உடையார் என்று கையெழுத்திட்டார். மாணிக்கவாசகரின் வாயிலிருந்து வந்த வாசகங்களை எழுதியதால் திருவாசகம் என்று அந்த நூலுக்கு பெயர் வந்தது.