சாரதாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4557 days ago
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஸ்ரீ சிருங்கேரி சிவகங்கா மடத்தின் புதுச்சேரி கிளை சார்பில், எல்லப்பிள்ளைச் சாவடியிலுள்ள சாரதம்பாள் கோவிலில், 39ம் ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி ஹோமம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை நவராத்திரி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, காலையில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.சிறப்பு அலங்காரத்துடன் சாரதாம்பாள், ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, காலை 9.00 மணிக்கு அப்பாராசு குழுவினரின் நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது.காலை 10.00 மணியளவில் ஸ்ரீ சாரதா கலா மந்திர் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை புதுச்சேரி கிளை நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.