சென்னிமலை முருகன் கந்த சஷ்டி விழா: யாகசாலை பூஜையுடன் துவக்கம்!
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், இன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது. "காக்க காக்க... என துவங்கும் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை மலை கோவில், 3,000 ஆண்டு பழமை வாய்ந்த திருத்தலம். சென்னிமலையில், 18 சித்தர்களுள் ஒருவரான பின்நாக்குச்சித்தர் வாழ்ந்து, முக்தியடைந்த திருத்தலம். இங்கு முருகப்பெருமானுக்கு உரிய, 16 திருமூர்த்தங்களும், இக்கோவிலில் காணப்படுவது தனிச்சிறப்பு. இச்சிறப்பு மிக்க கோவிலில், ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமிக்கு கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண விழா வெகுசிறப்பாக நடத்தப்படும். இந்தாண்டு விழா, இன்று (4ம் தேதி) காலை, 8 மணிக்கு, சென்னிமலை கிழக்கு ரதவீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இருந்து, முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாட்டுடன் துவங்கி, மலை கோவிலை அடையும். காலை, 9 மணிக்கு யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு மகா பூர்ணாகுதி, 11 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பகல், 12.30 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகமும், பகல், 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இந்த அபிஷேகம் மற்றும் அன்னதானம் தொடந்து, 8ம் தேதி வரை, ஐந்து நாட்களும், தினமும் இதே நேரத்தில் நடக்கும். 8ம் தேதி இரவு உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு, 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி, சென்னிமலை நான்கு ரதவீதிகளில் நடக்கிறது.
மேற்கு ரதவீதியில் ஜெகமகாசூரன் வதமும், வடக்கு ரதவீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரதவீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருவார். மறுதினம், 9ம் தேதி காலை, 11 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் திருக்கல்யாண உற்சவமும், அன்னதானமும் நடக்கிறது. கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு, 4ம் தேதி முதல், ஐந்து நாட்களுக்கு மலை கோவில் சமயச்சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்தர் கைக்கோள முதலியார் ஸ்ரீகந்த சஷ்டி விழா கமிட்டியார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்கின்றனர். இன்று முதல், 8ம் தேதி வரை, ஐந்து நாட்களும் தினமும் காலை, 8.30 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவில் காப்பு கட்டி, சிறப்பு விரதம் இருப்பவர்கள், விழா ஏற்பாட்டாளர் விஸ்வநாதனிடம், 99656 22442 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.