திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு!
ADDED :4337 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா நிறைவடைந்தது. கோயிலில், டிச.,20ல் துவங்கிய விழாவில், தினமும் உற்சவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் வந்து, திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல் துலக்குதல், தாம்பூலம் தரித்தல், மைஇட்டு கண்ணாடி பார்த்த நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. நிறைவு நாளை முன்னிட்டு, அம்மன் முன்பு யாகசாலை பூஜைகள் முடிந்து, சர்வ அலங்காரமாகி பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.