இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், துவார ஸ்கந்தர் சன்னிதிக்கு வடதுபுறம் உள்ள நிலை வாயில், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் மன்னரால் அமைக்கப்பட்டது என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் அடுத்த, துவார ஸ்கந்தர் சன்னிதிக்கு வடதுபுறம் நிலை வாயிலும், இடதுபுறம், காடவர் குல சிற்றரசன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி 1243 – 1279) காலத்து கல்வெட்டும் காணப்படுகிறது. இதில், வடதுபுற, நிலை வாயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை, திராவிட வரலாற்று ஆய்வகத்தைச் சேர்ந்த, அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர்கள், கணபதி முருகன், முத்துக்குட்டி, மணிமாறன் கூட்டாக ஆய்வு செய்துள்ளனர். அதன் விவரம்: ஸ்வஸ்த ஸ்ரீ அவணி ஆளப் பிறந்த; கோப்பெருஞ்சிங்கருக்காக; திருநிலைக்கால செய்வித்தார்; வர முதலிகளில் பெருமாளப் பிள்ளை யான சோழக்கோனார்என்ற வரிகள் கல்வெட்டில் காணப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கன் காடவர் குல குறுநில மன்னன் ஆவான் என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு, அவணி ஆளப் பிறந்தான் என்ற பட்டப் பெயர் இருந்தது; இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனைப் பற்றிய குறிப்பு என, உறுதிப்படுத்தப்படுகிறது. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிர்வாக ஆலோசனைகள் கூற, அகம்படி முதலி என்ற நிர்வாகக் குழு உதவி வந்துள்ளது. வர முதலி என, குறிப்பிட்டுள்ள பெருமாள் பிள்ளையாகிய சோழக்கோனார் அந்த நிர்வாகக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவர். கோப்பெருஞ்சிங்கன் மன்னர் ஆணைப்படி நிர்வாகக் குழுவில் இருந்த வர முதலி, துவார ஸ்கந்தர் சன்னிதிக்கு வடதுபுறம் உள்ள நுழைவாயில் நிலைக்கல் (நிலை வாயில்) அமைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. கோப்பெருஞ்சிங்கன் மன்னர் காலத்தில், இந்த நிலை வாயில் தான் அதிக புழக்கத்தில் இருந்துள்ளது. மேலும், இந்த நிலை வாயில் தான் ஆதிமூலவர் எனப்படும், மூலட்டானேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பிரதான வழியாக இருந்திருக்க வேண்டும் என, கருதப்படுகிறது. இந்த கல்வெட்டு குறித்து, இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கைகள், தென் இந்திய கல்வெட்டு தொகுதிகளில் குறிப்பிடவில்லை. இதனால், இந்த கல்வெட்டு, இதுவரை, கண்டறியப்படாத கல்வெட்டாகக் கருதப்படுகிறது. மேலும், கோவில் நடைபாதை படிக்கட்டுகளில் உள்ள கல்வெட்டுகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, திராவிட வரலாற்று ஆய்வக உதவிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.