திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் ரத்து!
திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம், நாளை, 10 மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளது. நாளை 8ம் தேதி, மாலை 4:45 மணி முதல், இரவு 7:05 மணி வரை, சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகணம் துவங்குவதற்கு, 6 மணிநேரம் முன், திருமலை, ஏழுமலையான் கோவில் நடையை சாத்துவது வழக்கம். அதனால், புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்படும். அன்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சந்திர கிரகணம் முடிந்த பின், இரவு 8:00 மணிக்கு, கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து, பூஜைகள் நடத்தப்படும். அதன்பின், இரவு 10:30 மணி முதல் நள்ளிரவு வரை, பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம், வி.ஐ.பி., பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், 50 ரூபாய் சுதர்சன தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளன.