சபரிமலை பக்தர்களுக்கு தேவசம்போர்டு : மூன்று நேரமும் அன்னதானம்!
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகிறது. இதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர். சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 11 வரை உப்புமா, கடலைக்கறி, சர்க்கரை காப்பி ஆகியவை வழங்கப்படுகிறது. மதிய உணவாக சோறு, சாம்பார், அவியல், துவரன், ஊறுகாய் வழங்கப்படுகிறது. இது மாலை 3 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு வரை கஞ்சி, பயிறு, துவரன், ஊறுகாய் போன்றவை வழங்கப்படுகிறது. அதன் பின்னரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் உப்புமா தயாரித்து வழங்கப்படும். 125 ஊழியர்களின் தொடர் உழைப்பில் அன்னதானம் நடைபெறுகிறது. ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் இதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.