தகட்டூர் பைரவர் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED :4041 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த, தகட்டூரில் புகழ்பெற்ற பைரவநாத ஸ்வாமி கோவில் உள்ளது. சிவமூர்த்தங்களில், 38வது மூர்த்தமாக இக்கோவில் விளங்குகிறது. வட இந்தியாவில் காசியிலும், தென்னிந்தியாவில் தகட்டூரிலும் பைரவர் தனி கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கிராம சாந்தி உள்ளிட்ட பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்கள் பழனியப்பன், அமிர்தகடேசன், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் ஸ்வாமி இந்திரவாகனம், யானை வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா நடக்கிறது. தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி மே, 3ம் தேதி நடக்கிறது.