அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம்!
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில், 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 15ஆம் ஆண்டு, 10 நாள் மகா உற்சவம் மற்றும் 6ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, நவசந்தி காப்பும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. மாலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 2ம் தேதி மாலை 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து, பத்மினி தேவி மூர்த்தி தலைமையில், பெண்கள் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். பகல் 11:00 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், விழாகுழுவினர் ராமதாஸ், ரமேஷ், கார்த்திகேயன், ராஜசேகர், ரஜேஷ், கணேசன், முத்து கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர் அன்னதானம் நடந்தது. பூஜைகளை சந்தோஷ் திருமேனி சிவாச்சாரியார், ராஜேஷ் ராமாமித சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேர் வடம் பிடித்தல் வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.