தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண விழா
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மெலட்டூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு, நேற்று திருக்கல்யாண விழா நடந்தது. ஸ்ரீ சித்தி புத்தி ஸமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவ விழா, 10 நாள்கள் நடக்கும். அதைபோல், இந்தாண்டு விழா கடந்த, 7ம் தேதி துவங்கியது. தினமும், பல்வேறு வாகனத்தில், வீதியுலா நடைபெற்றன. விழாவின், 7ம் நாளான நேற்று காலை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலவகையான சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு, விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவித்து, ஸ்ரீ சித்தி புத்தி சமதே தட்சிணாமூர்த்திக்கு, திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தன. பின்னர், தீபாரதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அத்துடன், ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப்படுகின்ற, 108 கணபதி ஸ்தலங்களில், 81வது ஸ்தலமாக ஸ்ரீ சித்த புத்தி ஸமேத தட்சிணாமூர்த்தி விநயாகரும் ஒன்று. திருக்கல்யாண வைபோகத்தில் கலந்துக்கொண்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பேறு உண்டாகும், கல்வி வளம் பெருகும் என்பதால் திருமண நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல பகுதிகளிலிருத்தும் பக்தர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.