சேரமான் பெருமாள் நாயனாருக்கு சிலம்பொலி கேட்கும்: ஆன்மிக சொற்பொழிவில் தகவல்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பெரியபுராண தொடர் சொற்பொழிவு, மலையடிவாரம் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில், நேற்று நான்காவது நாளாக நடந்தது. இதில், சென்னையை சேர்ந்த, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.வி.பி.எஸ். மணியன் பேசியதாவது: இன்றைய கேரளா மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்று ஒரு ஊர் உள்ளது. இதை தலைநகராக கொண்டு சேரமான் பெருமாள் நாயனார் ஆட்சி புரிந்து வந்தார். சிவபெருமான் இவரது அன்புக்கு உளமுவந்து சிலம்பொலி கேட்குமாறு அருள் புரிவார். ஒருநாள் பூஜையின் முடிவில் சிலம்பொலி கேட்கவில்லை. இதனால், வருத்தமுற்றவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். உடனே, நடராஜர் சிலம்பொலி கேட்டது. இதற்கு காரணம், நடராஜ பெருமான் நம்பியாரூரது தமிழ் பதிகங்களை கேட்டு மெய் மறந்ததால் தான் என, தெரிந்து கொண்ட சேரமான் பெருமாள், சுந்தரரை தரிசிக்க விரும்பி திருவாரூர் சென்று நட்பு பூண்டார். சுந்தரர், நாயனார் நட்பானது சுந்தரர் கயிலை செல்லும் வரை நீடித்தது. சுந்தரர் திருவஞ்சைக்களத்து ஈசனை வழிபட்டுக்கொண்டு சேரமானுடன் வாழ்ந்து வந்தவர், பூலோக வாழ்க்கையை நிறைவு செய்ய முடிவு செய்தார். இதை உணர்ந்த சிவபெருமான், ஐராவதம் என்ற தேவலோகத்து யானையை அனுப்பி சுந்தரரை அழைத்து வர ஆவன செய்தார். தம்பிரான் தோழரும் சுந்தரரை போலவே, திருநொடித்தான் மலை செல்ல தன் பட்டத்துக் குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரம் கூறி சுந்தரருக்கு முன்னதாக கயிலை சென்றடைந்தார். இவ்வாறு அவர் பேசினார்.