உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி!

செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி!

விருத்தாசலம்: முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்  செய்தனர். விருத்தாசலம் அடுத்த முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் கடந்த 15ம் தேதி  பிற்பகல் 1:30 மணியளவில் செம்புலிங்க அய்யனாருக்கும், மாலை 5:00 மணியளவில் முதுகுன்றீஸ்வரர் சன்னதியில் கொடியேற்றி,  காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் பெரியநாயகி,  முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி  நடந்தது.

நேற்று தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு  மேல் விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன்  செலுத்தினர். அதேபோல், பெரியநாயகி, முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் சிறப்பு  அலங்காரத்தில் வீதியுலா வந்து, மாலை 4:00 மணியளவில் சித்தர் ஏரியில் வேல் முழுகும் ஐதீக நிகழ்ச்சி, தீர்த்தவாரி  நடந்தது.  ஆயிரக்கணக்கானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று  சண்டிகேஸ்வரர் உற்சவம், நாளை மஞ்சள் நீர் உற்சவத்துடன் தீர்த்தவாரி உற்சவம் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !