உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி!

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், மகோதய புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது.

தை அமாவாசை, திருவோணம் நட்சத்திரம், சோமவாரம் ஆகியவை, ஒரு சேர அமையும் தினத்தில், மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் போல், 30 ஆண்டுகளுக்கு, ஒரு முறை மட்டுமே அமையும் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி மிகவும் விசேஷமானது.

நள்ளிரவு, 1 மணிக்கு, சுவாமிக்கு மஹா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர்  கோவிலில் இருந்து புறப்பட்ட உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், சூரிய உதயத்திற்கு முன், இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் எழுந்தருளினர். அதே நேரத்தில் சிவன் பட தெருவில் உள்ள அங்காளம்மன், ஒட்ட தெரு இரட்டை காளியம்மன், வட வீதி சுப்பிரமணிய சுவாமி, ஆதி காமாட்சியம்மன், பச்சையம்மன் ஆகிய சுவாமிகளும், ஒரு சேர குளக்கரையில் எழுந்தருளினர்.

சுவாமி தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் நீராட, வடக்கு பக்க குளக்கரை மற்றும் மேற்கு   பக்க குளக்கரையில், 10ஆயிரம் பக்தர்கள் குவிந்திருந்தனர். மேற்கு குளக்கரையில்  சிவாச்சாரியார்கள் கும்பம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, சுவாமி குளத்தில் இறங்கி நீராடும் தீர்த்தவாரி நடந்தது. அந்த நேரத்தில்  சிவாச்சாரியார்கள் குளத்தின் கரையை நோக்கி வெளியே வர தயாராயினர். அதே நேரம் பக்தர்கள் எதிர்பக்கமாக சென்றதால், குளத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அபூர்வ மகோதய தீர்த்தவாரியில், 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவர் என, தெரிந்திருந்தும், பாதுகாப்புக்கு பெயரளக்கு, 4 போலீசார் மட்டுமே அங்கு இருந்தனர். வேறு எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !