திருச்செந்தூரில் ஆவணித்தேரோட்டம் கோலாகலம்!
ADDED :5304 days ago
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதன் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் ஆவணித்திருவிழா கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பத்தாம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்குப்பின் காலை 6.10 மணிக்கு முதலில் விநாயகர் தேரும், பின்னர்,6.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் சமேத வள்ளி-தெய்வானை அம்பாள் தேரும், தொடர்ந்து 7.50 மணிக்கு வள்ளி அம்பாள் தேரும் ஏராளமான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு ரதவீதிகளைச் சுற்றி நிலை சேர்ந்தன. கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.