நாகையில் விஸ்வரூப விநாயகர் வீதியுலா!
நாகப்பட்டினம்: நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் வீதியுலா நடந்தது.இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு,நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.32 அடி உயரத்தில்,பாரிஸ் பிளாஸ்டரால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு வீதியுலா நடந்தது. மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம்,கேரளா ஜென்டை மேளம்,கதகளி, கரகாட்டம் உட்பட 30 க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் வீதியுலாவில் அணி வகுத்து வந்தன.நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட விநாயகர் வீதியுலா நாகையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நேற்று காலை நாகூர் வெட்டாறு பகுதிக்கு வந்தடைந்தது. பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலை படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நாகையில் இருந்து நாகூர் வரை நடந்த விநாயகர் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.