உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்மேடு பாதையில் வனக்காவலர்கள் ரோந்து பணி அதிகரிப்பு : பக்தர்கள் பயணிப்பதில் கட்டுப்பாடு

புல்மேடு பாதையில் வனக்காவலர்கள் ரோந்து பணி அதிகரிப்பு : பக்தர்கள் பயணிப்பதில் கட்டுப்பாடு

சபரிமலை: சபரிமலை செல்லும் புல்மேடு பாதையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனக்காவலர்களின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பயணிப்பதில் மீண்டும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக வரும் பாதையில் காலை நேரத்தில் பெரும்பாலும் யானை கூட்டம் நிற்கிறது. தகவல் அறிந்து வனக் காவலர்கள் அந்த இடத்துக்கு வந்து யானைகளை உள்காட்டுக்குள் அனுப்பு கின்றனர். இவ்வாறு யானை நிற்கும் தகவல் தெரிந்தால் சத்திரத்தில் இருந்து காலையில் பக்தர்களை அனுப்புவதிலும் தாமதம் ஏற்படுகிறது. காட்டு விலங்குகள் இல்லை என்ற தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சத்திரத்தில் இருந்து புல்மேட்டுக்கு பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர். சத்திரம், சீதைக்குளம், ஜீரோபாயின்ட், தாவளம், உப்புபாறை, உரக்குழி ஆகிய இடங்களில் வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தகவல் வந்த பின்னர்தான் பக்தர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காட்டு யானைகளை காணும் போது, அதை அலைபேசிகளில் படம் எடுக்க முயலும் போது ஆபத்தும் ஏற்படுகிறது என்பதால் பக்தர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளனர். இந்த பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் வனத்துறையால் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !