வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு
ADDED :3266 days ago
ஓசூர்: பேரண்டப்பள்ளி கிராமத்தில், வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரவசமடைந்த பக்தர்கள், மரத்திற்கு பூஜை செய்து, புதிய சிவப்பு துணி அணிவித்து வழிபட்டனர். ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி கிராமத்தில், ஆதிபரா சக்தி கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் பால் வடிந்தது. இதை அறிந்த அக்கிராம மக்கள், நேற்று காலை மரத்திற்கு பூஜை செய்து, குங்குமம், மஞ்சள் இட்டனர். பின், புதிய சிவப்பு துணியை மரத்திற்கு அணிவித்து, பூஜை செய்து வழிபட்டனர். இதை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராம மக்கள், பேரண்டப்பள்ளியில் குவிந்தனர். நேற்று காலையில் இருந்து மாலை வரை, பொதுமக்கள் பலர் வந்து, பால் வடிந்த மரத்தை வழிபட்டு சென்றனர்.