திண்டுக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலம்
திண்டுக்கல்: திண்டுக்கல் பெரிய பள்ளிவாசல் வழியாக குடைப்பாறைப்பட்டி விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்தது.திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்படுகிறது.குடைப்பாறைப்பட்டி விநாயகர் சிலை, ஊர் முக்கிய பிரமுகர்கள் கோபால், பிச்சை தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
டி.ஐ.ஜி. கார்த்திகேயன், சக்திவேல் எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., சீனிவாசன் டி.எஸ்.பி., சிகாமணி, இன்ஸ்பெக்டர்கள் தெய்வம், சுரேஷ் உட்பட 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், பெரிய பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் அமைதியாக நடந்தது. ஊர்வலத்தில் தாரைதப்பட்டை வாசிக்கப்பட்டது. இது பெரிய பள்ளிவாசல் வந்தவுடன் நிறுத்தப்பட்டது. பின்பு நாகல் நகர் பஜனை குழுவினர் கோலாட்டம் ஆடி வந்தனர். இந்த சிலை கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 60 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் மாரிமுத்து கொடியை அசைத்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாநகர தலைவர் போஸ், துணை தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் சண்முகபிரியன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஜி.போஸ், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகர தலைவர் தண்டபானி கலந்து கொண்டனர். மாநகர துணை தலைவர் வீரதிருமூர்த்தி நன்றி கூறினார். ஏ.எம்.சி., ரோடு, மாநகராட்சி அலுவலக சாலை, சன்னதி தெரு வழியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் 23 வது ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சியின் சார்பில் நகரில் பல பகுதிகளில் 78 பெரிய விநாயகர் சிலைகளும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் 2 ஆயிரம் சிறிய சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. கலையரங்கம் பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய ரோடுகள் வழியாக சென்றன. கொடைக்கானல் நகர, ஒன்றிய இந்து முன்னனி சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தை சிவக்குமார், அகஸ்தீஸ்வரன், முன்னாள் நகராட்சி தலைவர் கோவிந்தன், சாந்தம் பள்ளியின் தாளாளர் சாந்தசதீஷ், தங்கராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். நகர தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எழுச்சிரையாற்றினார். ஒன்றிய தலைவர் மகேஸ்வரன், நகர பொது செயலாளர் சக்திவேல், நகர பொருளாளர் சரவணக்குமார், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கே.ஆர்.ஆர். கலையரங்கத்தில் ஒன்று சேர்க்கப்பட்டன. பின்னர் லேக் ரோடு வழியாக 7 ரோடு, அண்ணாசாலை, ஆனந்தகிரி, அண்ணாநகர், டோபிகானல் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் 20 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இவற்றிற்கு சிறப்பு பூஜைகள் போடப்பட்டு நேற்று மாலை ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பாரதிய பார்வார்டு பிளாக் மாநில தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.
நாகணம்பட்டி பைபாஸ் ரோடு, பழநி ரோடு, பஸ்ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு வழியாக ஊர்வலம் சென்று விருபாட்சி தலையூற்றை அடைந்தன. அங்கு சிலைகளை கரைக்கப்பட்டன. தாசில்தார் மாரிமுத்து, நகராட்சி கமிஷனர் இளவரசன், துணை தாசில்தார் முத்துச்சாமி சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நத்தம்: நத்தத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் செல்லமணி தலைமை வகித்தார்.கோவை கோட்ட செயலாளர் சேவுகன் முன்னிலை வகித்தார். சமுத்திராபட்டி, கோவில்பட்டி, ஊராளிபட்டி, முளையூர், புண்ணப்பட்டி, உலுப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. நத்தம் கோவில்பட்டியில் துவங்கிய ஊர்வலம் நல்லாகுளம், பஸ் ஸ்டாண்ட், மூன்று லாந்தர், கொட்டாம்பட்டி ரோடு வழியாக அம்மன் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது. மாநில செயலாளர் கிஷோர், நிர்வாகிகள் செல்வராஜ், சின்னத்தம்பி, வீரமணி, முனியாண்டி , வெங்கடேசன். பா.ஜ., ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலம் முடிந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வத்தலக்குண்டில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இளைஞர்களிடையே சண்டை ஏற்பட்டு பிரச்னை எழும். அதிக சப்தத்துடன் கோஷமிட்டு பள்ளிவாசலை கடக்க நேரத்தை கடத்துவர். இதனால் திண்டுக்கல், பெரியகுளம், மதுரை ரோடுகளில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். போக்குவரத்து பாதிப்படையும். சிலைகளை கரைப்பது வரை போலீசார் நிம்மதியின்றி தவிப்பர். கடந்த காலங்களில் பள்ளிவாசலை கடக்கும் போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. சிலர் மீது வழக்கு பதிப்பட்டது.
நிலக்கோட்டையில் கடந்த ஆண்டு சிலைகளை கரைத்த போது வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் சென்றதால் 3 பேர் விபத்தில் பலியாகினர். இந்த ஆண்டு சுதாரித்த போலீசார் ஒவ்வொரு வாகனத்திற்கும் இரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பள்ளிவாசலை கடக்கும் போது ஊர்வலத்துடன் வருபவர்கள் அவரவர் வாகனங்களில் ஏற்றி அனுப்பபட்டதால் ஊர்வலம் விரைவாக நகரை கடந்தது. போக்குவரத்து நெரிசலும் குறைந்தது. நிலக்கோட்டையில் அசம்பாவிதம் நடக்காததாலும், அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்ததாலும், போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
வடமதுரை: வடமதுரையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி, பா.ஜ., பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. வடமதுரை, அய்யலுார், காணப்பாடி, செங்குளத்துபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, கொம்பேறிபட்டி உள்பட பல ஊர்களிலும் கடந்த 25ம் தேதி விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இவற்றில் தென்னம்பட்டி போன்ற சில கிராமங்களில் மக்களே ஊர்வலமாக எடுத்து சென்று அன்றைய தினமே சிலைகளை கரைத்தனர். பா.ஜ.., இந்து முன்னணி ஏற்பாட்டில் அய்யலுார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அங்கு ஊர்வலம் சென்றன. பின்னர் அனைத்து சிலைகளும் சரக்கு வேன்களில் வடமதுரைக்கு கொண்டு வரப்பட்டு, தேரடி வீதிகளை சுற்றி ஊர்வலம் சென்ற பின்னர் நரிப்பாறை குளத்தில் கரைக்கப்பட்டன.