எப்பநாடு ஈஸ்வரன் கோவில் விழா கோலாகலம்
ADDED :2818 days ago
ஊட்டி:ஊட்டி அருகே எப்பநாடு பிரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஊட்டி எப்பநாடு அருகேவுள்ள மலை உச்சியில், பிரமுக்கு ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. 12:00 மணி முதல் 3:00 மணிவரை மதிய கால பூஜையும், அன்னதானமும் நடந்தது. இதில், எப்பநாடு, மரகல், அணிக்கொரை, தொரையட்டி, சின்ன குன்னுார், கடநாடு, காவிலோரை, கொதுமுடி, துானேரி, கெங்கமுடி, இடுஹட்டி, கக்குச்சி உட்பட, 30 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பங்கேற்று ஈஸ்வரனை வழிபட்டனர். வனங்கள் சூழ்ந்த மலைப் பாதையில், நீண்ட துாரம் நடந்து வந்து, நேர்த்தி கடன் செலுத்தினர்.