இன்று சந்திர கிரகணம்: கோவில் நடை அடைப்பு
ADDED :3099 days ago
திருப்பூர் :இன்று சந்திர கிரகணம் என்பதால், கோவில்களில் நடை சாத்தப்படுகிறது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது, சந்திர கிரகணம் உண்டாகிறது. அவ்வகையில், இன்று மாலை, 5:16க்கு சந்திர கிரணம் துவங்கி, மத்திய காலத்தை இரவு, 6:58க்கு கடந்து, இரவு, 8:40 மணிக்கு முடிகிறது. இதனால் கோவில் நடை சாத்தப்படுகிறது; வழக்கமாக தைப்பூசத் தேர்த்திருவிழா, மாலையில் நடப்பதற்கு பதிலாக, இன்று காலை நடக்கிறது. சந்திர கிரகணத்தையொட்டி, கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடத்தி, மதியம் நடை சாத்தப்படுகிறது. வழக்கம் போல் மாலையில் நடை திறக்கப்படாது. சந்திர கிரகணம் முடிந்ததும், கோவில்கள் தண்ணீரால் துய்மைப்படுத்தப்பட்டு, தர்ப்பை புல், புனிதநீர் ஊற்றி, பரிகார சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பிறகே, நடை திறக்கப்படுகிறது.