உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் தைப்பூச தேரோட்டம்

ராமேஸ்வரத்தில் தைப்பூச தேரோட்டம்

ராமேஸ்வரம்:தைப்பூசத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தெப்பத்தில் வலம் வந்தனர். 60 ஆண்டுக்கு பிறகு நேற்று தைப்பூசம், சந்திர கிரகணம் நடந்ததால் நேற்று காலை 2:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் நடை திறக்கப்பட்டது.

கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, லட்சுமனேஸ்வர் கோயிலில் எழுந்தருளினர். லட்சுமனேஸ்வர் கோயில் தெப்பத்தில் அலங்கார தைப்பூச தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், பக்தர்கள் தேரின் வடத்தை இழுத்து வலம் வந்தனர். விழாவில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயிலில் எழுந்தருளியதும், மாலை 3:00 மணிக்கு நடைதிறந்து மாலை 5:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சந்திர கிரகணத்தையொட்டி மாலை 5:05 மணிக்கு நடை சாத்தியதும், கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி இரவு 7:30 மணிக்கு அக்னி தீர்த்த கரையில் தீர்த்தவாரி நடந்தது. இரவு 9:00 மணிக்கு கோயிலில் கிரகண அபிேஷக, பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !