சோளீஸ்வரர் கோவிலில் மண்டபம் தயார் அன்னதான கூடம் பணிகள், விறுவிறு
ஆற்காடுகுப்பம்: சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் வசதிக்காக, 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, திருமண மண்டபம், விரைவில் திறக்கப்பட உள்ளது. அன்னதான கூடம் கட்டட பணிகளும், துரித வேகத்தில் நடக்கின்றன. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, சோளீஸ்வரர் கோவில், ஆற்காடுகுப்பம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு, திருத்தணி, ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம், நெடும்பரம், ராமலிங்கபுரம், இலுப்பூர், இல்லத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இது தவிர, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, சிவராத்திரி, பவுர்ணமி போன்ற முக்கிய விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர்.
இந்நிலையில், கோவில் நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காகவும், கிராம பொதுமக்கள் நலன் கருதியும் கோவில் வளாகத்தில், மினி திருமண மண்டபம் கட்டுவதற்கு தீர்மானித்து, பொது நிதியிலிருந்து, 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி, கட்டட பணிகள் ஓராண்டு நடந்தன. தற்போது, மினி திருமண மண்டபம் திறப்பதற்கு தயாராக உள்ளது. அதே போல், சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில், மதிய உணவு, 100 பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. இதற்காக, அன்னதான கூடம் கட்டுவதற்கு, 55 லட்சம் ரூபாய், கோவில் நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது, பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.