மயிலை கபாலீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!
சென்னை : ஆருத்ரா தரிசன விழா, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தமிழகத்தின் முக்கிய கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆகமவிதிப்படி, திருவாதிரை நட்சத்திரத்தை அடிப்படையாக கொள்ளாமல், பவுர்ணமி திதியை அடிப்படையாக கொண்டு, ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, இங்கு, நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, உற்சவர் நடராஜர் கபாலீசுவரர் கோவில் திருமண மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவருக்கு பால், இளநீர் உட்பட 16 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர் வீதி உலா மயிலாப்பூரின் நான்கு மாடவீதிகளிலும் நடைபெற்றது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் தேவாரம் பாடி இறைவனை வழிபட்டனர்.