சக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்
ADDED :2961 days ago
நரசிங்கபுரம்: சக்தி மாரியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், பழைய வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, கடந்த, 14ல், சக்தி அழைத்தல், காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று, தீ மிதி திருவிழாவையொட்டி, அக்னி சட்டி எடுக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, பூசாரி சக்தி கரகத்துடன் வீதியுலா வந்து, கோவில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கினார். தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.