திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்சமூர்த்திகள் தீர்த்த உற்ஸவம்
ADDED :2434 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தன.
பல ஆண்டுகளுக்குப்பின் நேற்று தை அமாவாசை, வியதிபாத யோகம், திருவோண நட்சத்திரமும் இணைந்து வந்தது. அதையொட்டி காலை 9:00 மணிக்கு கோயிலில் மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வானத்தில் சத்தியகிரீஷ்வரர், ஆவுடை நாயகி, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் புறப்படாகி சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு யாக பூஜை முடிந்து சுவாமிகளுக்கு சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பின் சுவாமிகள் ரத வீதிகளில் வீதிவுலா வந்து அருள்பாலித்தனர்.