கருவறையில் அத்தி வரதர் மைலம்பாடி ஜீயர் வலியுறுத்தல்
அந்தியூர்: அத்தி வரதரை மீண்டும் ஜலவாசத்தில் வைக்காமல் வரதராஜ பெருமாள் கோவில் கருவறையில் வைத்து வழிபட வேண்டும் என மைலம்பாடி சுதர்சன மடம் ஜீயர் ஸ்ரீநம்பி ராமானுஜர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைலம்பாடியில் பழமை வாய்ந்த சுதர்சன மடம் செயல்படுகிறது. இதன் ஜீயர் ஸ்ரீநம்பி ராமானுஜர் கூறியதாவது:வரதராஜ பெருமாள் பரமபதம் பாற்கடல் ராமானுஜர் என பல்வேறு அவதாரங்கள் புரிந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். அவர் 40 ஆண்டுகளுக்கு பின் ஜல வாசத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க பூலோகம் வந்துள்ளார். அவர் எழுந்தருளிய பின் நாட்டில் நல்ல மழை பெய்கிறது.காஞ்சியில் தற்போது அருள்பாலிக்கும் அத்தி வரதராஜ பெருமாளை காஞ்சி திருக்கோவில் கருவறையில் வைத்து வழிபட்டால் நாடு வளம் பெறும். எனவே 48 நாட்கள் பூஜைக்கு பின் அத்தி வரதரை கருவறையில் வைத்து வழிபட வேண்டும்.இதனால் அனைத்து தரப்பு பக்தர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அத்தி வரதரை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இதற்கு ஆன்மிக சான்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.