மாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், வெளிநாட்டுப் பயணியர் சுற்றுலா களைகட்டுகிறது.மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பிற்கு பின் அங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் துவங்கினர். இந்நிலையில் தற்போது அங்கு வெளிநாட்டு பயணி களும் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளனர்மாமல்லபுரத்தில் கட்டப் பட்டுள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால சிற்பங்களை காண, பயணியர் வருகின்றனர்.இங்குள்ள கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரைகளை, உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.வெளிநாட்டுப் பயணியர் ஆண்டு இறுதியில் இங்கு குவிவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஆண்டு இறுதியில் கடுங்குளிர் நிலவும். இக்காலத்தில், இயல்பு தட்ப வெப்ப சூழல் நிலவும் இந்தியாவிற்கு, அந்நாட்டினர் சுற்றுலா வருவர். தற்போதும், வெளி நாட்டுப் பயணியர் சுற்றுலா துவங்கி, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டினர் இங்கு வருகின்றனர். பயண முகவர்கள் மூலம் வரும் பயணியர், குழுக்களாக குவிகின்றனர். மாமல்லபுரத்தில் தற்போது, இப்பயணியர் குவிந்து சுற்றுலா களைகட்டுகிறது.