/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மார்கழி வழிபாடு
/
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மார்கழி வழிபாடு
ஜன 12, 2026

மார்கழித் திங்கள் பகவானுக்கு உகந்த மாதம். தேவர்களின் பிரம்ம முகூர்த்தம். ஆன்மிக வளர்ச்சிக்கு உகந்த காலம். ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் மாணிக்கவாசகர் திருப்பாவை - திருவெம்பாவை இயற்றப்பட்ட மாதம். ஆன்மிக கலாச்சாரச் சிறப்புக்களைக் கொண்ட இம்மாதத்தில் வைகறையில் நீராடி இறைவனை வழிபடுவது பாவங்களை அகற்றி சகலவித சௌபாக்கியங்களையும் நல்கும் என்பது நம்பிக்கை.
தனுர் மாதம் என அழைக்கப்படும் இம்மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் “ நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் “ என்றார். ஆண்டாள் திருமாலை திருமணம் புரிந்ததும் - திருப்பாற் கடலைக் கடையும்போது விஷத்தை சிவபெருமான் உண்டு உலகைக் காப்பாற்றியதும் இந்திரனால் பெருமழை உருவானபோது கோகுலத்திலுள்ள அனைவரையும் காப்பாற்ற கிருஷ்ண பகவான் குடையாகப் பிடித்துக் காப்பாற்றியதும் இம்மாதத்தில்தான். இம்மாதத்தில்தான் திருவாதிரை - வைகுண்ட ஏகாதசி - அனுமந் ஜெயந்தி போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சிறப்புமிகு மாதத்தில் சிங்ப்பூரின் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் சூரியனின் கிரணங்கள் தோன்று முன்னே பக்திரசம் நனி சொட்டச் சொட்ட பாவைப் பாடல்கள் இப்பகுதி முழுவதும் பரவி தெய்வீக சூழலைத் தோற்றுவித்து வருகிறது. வைகானஸ ஆகம முறையை முழுவதுமாகப் பின்பற்றி வரும் இவ்வாலயத்தில் வைணவ சம்பிரதாயம் சிறிதும் வழுவாமல் பின்பற்றப்படுவதை அனைவரும் பாராட்டுவது கண்கூடு.
இப்பகுதியைச் சார்ந்த ஆண்டாள் குழு வைகறையிலேயே நாள்தோறும் திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடி ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு சமர்ப்பித்து ஆராதனம் செய்வது கண்கொள்ளாக் காட்சி. திருப்பாவை 27 ஆம் நாள் கூடாரவள்ளி நன்னாள்..ஆண்டாள் நாச்சியார் நன்னாள். சில ஆலயங்களில் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஒரு ஆராதனை தளுகை சமர்ப்பித்து சிறப்பாக சங்கு சக்கரம் போல் காட்சிப்படுத்தியமை மெய்சிலிர்க்க வைத்ததது. அக்கார வடிசல் வாளி ஸ்ரீகோதாவுக்கு கண்டருளப் பண்ணியது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போலிருந்து. 150 வாளி - ஒரு வாளிக்கு ஒரு கிலோ அக்கார வடிசலுடன் நீல நிறை உடையணிந்த மங்கள மகளிர் ஆலயப் பிரதட்சணம் செய்து சமர்ப்பித்தமை ஆலயம் முழுவதும் தெய்வீக மணம் பரப்பியது. ஆலயத் தலைமை அர்ச்சகர் வைகானஷ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தமக்கே உரிய பாணியில் இதன் தாத்பர்யத்தை விளக்கியபோது சாட்சாத் ஸ்ரீ சீதா - லட்சுமண ஹநுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அருள் பெற்றது போன்றிருந்ததாக பக்தர்கள் உணர்ந்தனர்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement

