/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் பொங்கல் ஒளியூட்டு விழா
/
சிங்கப்பூரில் பொங்கல் ஒளியூட்டு விழா

சிங்கப்பூரில் பொங்கல் ஒளியூட்டு விழா
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்க ஏற்பாட்டில் ஜனவரி 10 ஆம் தேதி கிளைவ் தெருவில் அமைந்த சிறப்புப் பந்தலில் தமிழர் திருநாள் - பொங்கல் ஒளியூட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சமுதாயக் கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஓங் யீ காங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பலத்த கரவொலிக்கிடையே குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். விழாவில் கலாச்சார சமூக இளையர் துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் - சட்ட மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை - வர்த்தக தொழில் துறை துணையமைச்சர் ஆல்வின் டாண் - மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டேனிஸ் புவா மற்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஷில்பக் அம்புலே முதலானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
விழாவில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம் - பொய்க்கால் புரவியாட்டம் - புலியாட்டம் - மயிலாட்டம் - பறை இசை - கோலாட்டம் - உறுமி மேளம் - நாட்டுப்புறப் பாடல் என பார்வையாளர்களைக் கலைஞர்கள் கொள்ளை இன்பத்தில் குதூகலிக்கச் செய்தனர். பல்வண்ண மின் விளக்குகள் தேக்கா பிளேஸிலிருந்து சிராங்கூன் சாலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அப்பால் வரை ஜொலித்துப் பார்வையாளர்களையும் சுற்றுலாவாசிகளையும் பல்லின சமுதாயத்தினரையும் மகிழ்விக்கும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கார்த்திகேயன் வெங்கடேசன் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். ஜனவரி 9 ஆம் தேதி லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள “ பொலி “ திறந்த வெளி கூடாரத்தில் கால்நடைக் கண்காட்சியும் மாணவச் செவ்வங்களை மகிழ்வித்து வருகிறது.
- நமது சிங்கப்பூர் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement

