உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  இன்னும் நடிகர் தானா?

 இன்னும் நடிகர் தானா?

'தேவையின்றி வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொள்கிறார்...' என, ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் குறித்து கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜன சேனா, பா.ஜ., ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு திரைப்பட ஹீரோவான பவன் கல்யாண், அரசியல்வாதியாக மாறி 15 ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், பொது நிகழ்ச்சிகளில் சினிமா ஹீரோக்கள் போலவே உணர்ச்சிகரமாக பேசுகிறார். ஊழலுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, சமீபத்தில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா என்ற கட்சியை துவக்கியுள்ளனர். இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு கூட்டமும் திரள்கிறது. இது குறித்து பவன் கல்யாணிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிராகரிக்கும்போது, இது போன்ற கட்சிகள் உதயமாவதை தவிர்க்க முடியாது...' என்றார். 'உங்கள் கூட்டணியில் உள்ள மத்திய அரசுக்கு எதிராகத் தானே, கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடத்துகிறது' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனடியாக சுதாரித்த பவன் கல்யாண், 'அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்த கரப்பான் பூச்சிகள் மிக மோசமானவை...' என்றார் அதிரடியாக. ஜன சேனா கட்சியினரோ, 'எங்கள் தலைவர் இன்னும் முழு அரசியல்வாதியாக மாறவில்லை; நடிகராகவே இருக்கிறார்...' என, கவலைப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !