தினமலர் செய்தி எதிரொலி - திருமங்கலம் 100 அடி சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
திருமங்கலம்:திருமங்கலம், பாடி மேம்பாலங்களுக்கு இடையே, 100 அடி சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் துாண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, ஆங்காங்கே சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால், 100 அடி சாலை குறுகியுள்ளது.அதேபோல், அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், பாடி, தாதங்குப்பம், செந்தில்நகர், ரெட்டேரி ஆகிய இடங்களில், சாலையோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.ஏற்கனவே குறுகலாக உள்ள இச்சாலையின் இரண்டு புறங்களிலும் நடைபாதை தள்ளுவண்டி மற்றும் வாகனங்களை நிறுத்தி விற்பனை நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன.இதுகுறித்து, நம் நாளிதழில், 'நுாறடி சாலையை தரை வாடகைக்கு விட்ட போலீஸ்' என்ற தலைப்பில், செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று காலை, திருமங்கலம் போக்குவரத்து உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஆகியோர், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.மேலும், மீண்டும் ஆக்கிரமிக்காத வகையில், சாலையோரங்களில் தடுப்புகள் அமைத்து நடவடிக்கை எடுத்தனர்.