உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., மகளிர் அணி இணை செயலர் விந்தியா: ஆளத் தெரியாத தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கு எதிராகவும் எத்தனையோ குற்றங்கள், அவலங்கள் நடக்கின்றன. மகளிருக்கு சிறு பிரச்னை என்றாலே, ரோட்டுக்கு வந்த தி.மு.க., கூட்டணி கட்சியின் மகளிர் அமைப்பினர், கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதி காக்கின்றனர்; அவர்களும் தேர்தல் நெருங்கும்போது பேச துவங்கி விடுவர்.டவுட் தனபாலு: தேர்தலில் கணிசமான 'சீட்'களையும், கட்டு கட்டாக நோட்டுகளையும் ஆளுங்கட்சி வாரி இறைத்துவிட்டால், கூட்டணி கட்சிகள் எல்லாம் வாயை திறப்பது, 'டவுட்' தான்... ஒருவேளை அங்க பேரம் படியாம, உங்க பக்கம் வந்துட்டாங்க என்றால், உங்களை விட அதிகமாகவே ஆளுங்கட்சியை வசை பாடுவாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் உள்ள, 31,336 அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், 2025 - -26ல், 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக, 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 31,336 அரசு பள்ளிகளில், 25.50 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள 4,498 தனியார் பள்ளிகளில், 30.60 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். போதிய கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளிகளில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. டவுட் தனபாலு: 'அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருது'ன்னு அமைச்சர் மகேஷ் பெருமை அடிச்சுக்கிறாரு... ஆனா, யதார்த்தம் அப்படி இல்லையே... பள்ளிக்கல்வித் துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு வாரி வழங்கியும், பலன் என்னவோ பூஜ்யமா தான் இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக அரசு கல்லுாரிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக, 7,300க்கும் மேற்பட்ட கவுரவ பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். எந்த இடத்திலும் அவர்கள் கவுரவமாக நடத்தப்படவில்லை. 11 மாதங்கள் மட்டுமே சொற்ப அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. துறை தலைவர்கள் இல்லாத கல்லுாரிகளில் துாணாக நின்று, லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வரும் அவர்களுக்கு மாதம், 57,500 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.டவுட் தனபாலு: 'உயர் கல்வியில் உயர பறக்கும் தமிழகம்'னு பெருசா பேசுறாங்களே... உயிரை கொடுத்து உழைத்து, அரசுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் கவுரவ பேராசிரியர்களுக்கு, இந்த ஆட்சி முடியும் நேரத்திலாவது உரிய ஊதியத்தை அரசு வழங்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி