உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  பல்லக்கு துாக்குவது தான் ஜனநாயகமா?

 பல்லக்கு துாக்குவது தான் ஜனநாயகமா?

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தர்மபுரி சட்டசபை தொகுதியில் இருந்து முதன் முறை சட்டசபை உறுப்பினராக தேர்வாகியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சவுமியா அன்புமணி, அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சவுமியா சிறந்த பேச்சாளர் என்றாலும், இக்கட்சியின் செஞ்சி தொகுதி, எம்.எல்.ஏ., கணேஷ்குமார், ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக இருந்தவர்; சபை நடவடிக்கைகளில் அனுபவம் உள்ளவர்; படித்தவர், சிறந்த பேச்சாளர், வாதத்திறமை உள்ளவர். அவரை சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுப்பதை விட்டு, தன் மனைவி என்ற ஒரே காரணத்திற்காக சவுமியாவை தேர்ந்தெடுத்துள்ளார், அக்கட்சி தலைவர் அன்புமணி. தி.மு.க.,விலோ கே.என்.நேரு, தங்கம் தென்னரசு போன்ற மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது, தன் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, உதயநிதியை சட்டசபை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார், அக்கட்சி தலைவர் ஸ்டாலின். இதன்வாயிலாக, எதிர்க்கட்சி தலைவராக ஆக்கப்பட்டுள்ள உதயநிதி, ஓர் அமைச்சருக்கான அந்தஸ்து மற்றும் சலுகைகளையும் பெறுகிறார். அதிகாரம் எப்போதும் பூனையை போல் தன் வீட்டை மட்டுமே சுற்றி வர வேண்டும்; அதை, அடுத்தவர் அனுபவித்து விடக்கூடாது என்பதன் வெளிப்பாடு இது! தி.மு.க.,வுக்கு சோதனை ஏற்படும் போதும், தேர்தல் நேரங்களின் போதும், 'உடன்பிறப்புகளே... இரவு - பகல் பாராது, கண் விழித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுங்கள்; உயிரை துச்சமென மதித்து பணியாற்றுங்கள்' என்று அடுக்கு மொழியில் பேசி, தொண்டர்களை சூடேற்றுவதும், தேர்தல் முடிந்த பின், கட்சிகாரர்களுக்கு, 'அல்வா' கொடுத்துவிட்டு, தன் வாரிசுகள் பதவி சுகத்தை அனுபவிக்க வழிசெய்வதும் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கைவந்த கலை. அதேபோல், தே.மு.தி.க., வில் தன் தம்பி சுதிஷை, கொல்லை புறவழியாக ராஜ்யசபா உறுப்பினராக்கி டில்லிக்கு அனுப்பி வைத்து, தான் சட்டசபை உறுப்பினராக கோட்டைக்குள் நுழைந்து, பதவி சுகங்களை அனுபவிக்க தொடங்கி விட்டார், அக்கட்சி தலைவி பிரேமலதா. அவ்வழியில் இப்போது, பா.ம.க., தலைவர் அன்புமணியும் குடும்ப அரசியலில் கோலச்ச தொடங்கி விட்டார். குறிப்பிட்ட ஒரு குடும்ப உறுப்பினர்கள் பதவிகளில் அமரவும், பணப்பெட்டிகளை நிரப்பவும் பல கோடி தொண்டர்கள் பல்லக்கு துாக்கிகளாக இருப்பதற்கு பெயர் தான் ஜனநாயகமா?

மதுவிலக்கு வேண்டும்!

எஸ்.ராஜாராமன், வழக் கறிஞர், திண்டிவனத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளி - கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் அருகில் இருக்கும் 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார், தமிழக முதல்வர் விஜய். இது உண்மையில் பாராட்டுக்குரியது. இதேபோல், கொஞ்சம் கொஞ்சமாக மாநிலம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். 'காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவேன்' என்று கூறும் விஜய், அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பூரண மது விலக்கு இருந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 197௧-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழகத்திற்குள் வந்த மது, இன்று டாஸ்மாக் கடைகளின் பெருக்கத்தால், வீட்டுக்கொரு குடி காரர் உருவாகியுள்ளார். போதைக்கு அடிமையானவர்களால் பல்வேறு சமூக குற்றங்கள் நிகழ்கின்றன. கொலைகளும், தற்கொலைகளும் அரங்கேறுகின்றன; சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இவற்றை எல்லாம், கடந்த தி.மு.க., அரசு கண்டுகொள்ளாமல், டாஸ்மாக் கடைகளின் வாயிலாக வரும் பணத்தின் மீதே முழு கவனத்தையும் செலுத்தியதால், மக்கள் அந்த அரசை வீட்டிற்கு அனுப்பி விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை மூடி, மீண்டும் பூரண மது விலக்கு நிறைந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்! விஜய் செய்வாரா?

வினோத புள்ளி விபரம்!

எல்.முருகராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 35 சதவீத மக்கள் தான் ஓட்டுப் போட்டுள்ளனர்; அப்படி என்றால், மீதி 65 சதவீதம் பேருக்கு த.வெ.க.,வை பிடிக்கலை என்று தானே அர்த்தம்?' என்று கேட்டுள்ளார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி. இதைக் கேட்டதும், இவரது கட்சி தோற்ற போதெல்லாம், இவரது தாத்தாவும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி, இப்படி போட்ட புதுப்புது கணக்குகள் தான் ஞாபகம் வருகிறது. தாத்தா வழியில் பேரனும் இப்போது ஒரு வினோத கணக்கைச் சொல்லியுள்ளார். த.வெ.க.,வை, 65 சதவீதம் பேருக்குப் பிடிக்கவில்லை என்றால், தி.மு.க., வாங்கியதோ வெறும், 24 சதவீத ஓட்டுகள் தான்; அப்படியானால், 76 சதவீதம் பேருக்கு, தி.மு.க.,வை அறவே பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்? தனி ஆளாக நின்று, 108 சீட்களை பெற்றிருக்கிறார் முதல்வர் விஜய். ஆனால், தி.மு.க.,வோ, 22 கட்சிகளோடு கூட்டணி வைத்தும், 59 சீட்கள் தானே பெற்றுள்ளது... உதயநிதியின் பேச்சைப் பார்க்கும் போது, ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில், சக நடிக ரைப் பார்த்து, 'நீங்க பத்தாம் கிளாஸ் பெயில்ணே; நான் எட்டாம் கிளாஸ் பாஸ்ணே' என்பார். அதுபோல் உள்ளது, உதயநிதியின் புள்ளி விபர கணக்கு! lll நன்றி, உதயநிதி அவர்களே! கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் முடியும் வரை அடக்கி வாசித்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, இப்போது மீண்டும், 'சனாதனம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்' என்று சட்ட சபையில் பேசியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டி, கடந்த இரு மாதங்களாக தி.மு.க.,வினர் கோவில் கோவிலாக ஏறி, நேர்த்திக் கடன் செலுத்திக் கொண்டிருந்தனர்; தி.மு.க., தலைவர் ஸ்டாலினோ, 'ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல தி.மு.க.,' என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வாய் வலிக்க பேசி, தன்னுடைய அரசு இதுவரை எத்தனை கோவில்களுக்கு கும்பாபிேஷகம் செய்துள்ளது என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். அப்போது உதயநிதி முழங்கி இருக்க வேண்டியது தானே, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று! தேர்தல் வந்துவிட்டால் ஹிந்துக்களின் ஓட்டுக்காக, ஐம்புலன்களையும் அடக்கி வாசிப்பதும், தேர்தல் முடிந்துவிட்டால் ஹிந்து விரோத கொள்கைகளை முழங்குவதும் என்று இரட்டை வேடம் போட, உதயநிதிக்கு வெட்கமாக இல்லையா? ஏற்கனவே இதுபோன்று பேசி, சென்னை உயர் நீதிமன்றத்தால் குட்டுப்பட்டும் திருந்தவில்லை. உதயநிதி இப்படியே பேசிக் கொண்டிருந்தால் ஹிந்துக்கள், தி.மு.க.,வை நிரந்தரமாக வனவாசம் அனுப்புவது உறுதி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ