அவர் ரத்தத்துலயே ஊறியிருக்கும்!
சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில், அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரது மகளின் திருமணம் நடந்தது. இதில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். பின், அங்கு நடந்த இசை கச்சேரி மேடைக்கு வந்த ஜெயகுமார், எம்.ஜி.ஆர்., நடித்த, எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் 'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்...' என்ற பாடலை ராகத்துடன் பாடி அசத்தினார். இதை, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'ஜெயகுமார் அண்ணன் எங்க போனாலும், எம்.ஜி.ஆர்., பாடலை வரிபிசகாம பாடுறாரே... மனப்பாடம் பண்ணி வச்சிருப்பாரோ...?' எனக் கேட்க, அருகில் இருந்தவர், 'அது, அவர் ரத்தத்துலயே ஊறியிருக்கும் பா...' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.