விளம்பரம் இல்லாம செய்வாங்களா?
தி.மு.க., கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள்தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். சமீபத்தில் ஈஸ்வரனிடம், 'திருச்செங்கோடு நகராட்சி துாய்மை பணியாளர்களை, த.வெ.க., கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ் மிரட்டியதாக புகார் வந்துள்ளதே?' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஈஸ்வரன், 'திருச்செங்கோடு நகரம் மேடு, பள்ளங்கள் நிறைந்த பகுதி. பள்ளத்தில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீரை அகற்ற, 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக, 35 கோடி ரூபாயில் பணி துவங்கப்பட்டுள்ளது. 'இதை, எம்.எல்.ஏ.,வான என்னிடமோ அல்லது நகராட்சி தலைவர், துணை தலைவரிடமோ அவர் கேட்டு தெரிந்திருக்க வேண்டும். அதை விடுத்து, விளம்பரத்திற்காக அவர் ஏதேதோ செய்கிறார்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அரசியல்வாதிகள், விளம்பரம் இல்லாம எதையும் செய்ய மாட்டாங்களே' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.