பணத்தை இழுத்தடிக்காம தரணும்!
புதுக்கோட்டைக்கு வந்திருந்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'கடந்த ஆட்சி காலத்தில் பணப் பட்டுவாடா காலதாமதம் ஆனதால், விவசாயிகள் தனியார் பால் நிறுவனத்தை நோக்கி சென்றனர். தற்போது, அவர்கள் ஆவின் நிறுவனம் நோக்கி வருவதற்கு உண்டான வேலைகளை செய்து வருகிறோம்.'ஆவின் நிறுவனத்தை நம்பி, விவசாயிகள் பாலை கொடுக்க முன்வர வேண்டும். தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக, பல்வேறு கூட்டுறவு பால் சொசைட்டிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் இல்லை...' என்றார்.இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க பாலுக்கான பணத்தை இழுத்தடிக்காம தந்தால், விவசாயிகள் ஏன் தனியாரை நோக்கி போக போறாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.