இதே நாளில் அன்று
ஏப்ரல் 21: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள தென்கரையில், ராமகிருஷ்ண கனபாடிகள் - லட்சுமி தம்பதியின் மகனாக, 1924, ஜூன் 16ல் பிறந்தவர், டி.ஆர்.மகாலிங்கம். இவர் சிறுவயதிலேயே செல்லுார் சேஷ அய்யங்காரிடம் கர்நாடக சங்கீதம் கற்று, மேடையில் உரக்க பாடும் திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது பாட்டை கேட்ட, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நந்தகுமார் திரைப் படத்தில் நடிக்க வைத்தார். பிரகலாதா, மாயஜோதி உள்ளிட்ட படங்களில், சிறுவேடங்களில் நடித்து, ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் முருகனாக நடித்து, புகழ் பெற்றார். நாம் இருவர், வேதாள உலகம், மாலை இட்ட மங்கை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் பாடிய, 'செந்தமிழ் தேன்மொழியாள், இசைத்தமிழ் நீ செய்த, ஆடை கட்டி வந்த நிலவோ' உள்ளிட்ட பாடல்கள், இன்றும் இனிப்பவை. 'கலைமாமணி' விருது பெற்ற இவர், தன் 53வது வயதில், 1978ல் இதே நாளில் மறைந்தார். தமிழ் சினிமாவின், 'வெண்கல குரலோன்' மறைந்த தினம் இன்று!