உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  12 வயது சிறுமியை சீரழித்த மேஸ்திரிக்கு 44 ஆண்டு

 12 வயது சிறுமியை சீரழித்த மேஸ்திரிக்கு 44 ஆண்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12 வயது சிறுமியை சீரழித்த மேஸ்திரிக்கு, 44 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்தவர் சந்திரன், 65. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் மேஸ்திரியாக பணி செய்து வந்தார். இவர், 2021, ஜூன் மாதம், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து, தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். கும்மிடிப்பூண்டி போலீசார், சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். நேற்று நடந்த விசாரணைக்கு பின், நீதிபதி உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சந்திரனுக்கு 44 ஆண்டு சிறை தண்டனையும், 52,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், சிறுமிக்கு நிவாரணமாக, 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். மற்றொரு வழக்கு சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர தாஸ், 54, கடந்த 2023ல் 5 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கோயம்பேடு மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுபாஷ் சந்திர தாஸ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி, அவருக்கு பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ், 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 51,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி