மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னை,வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 52; தனியார் நிறுவன ஊழியர். அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்து உள்ளார்.புகாரில், 2021ம் ஆண்டு சியோன் ஆன்லைன் சேவை நடத்தி வந்த நெல்லுாரைச் சேர்ந்த, வடலபள்ளி விஜயகுமார் என்பவர், புதுச்சேரி, மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரியில் தன் மகளுக்கு எம்.பி.பி.எஸ்.,சீட்டு வாங்கி தருவதாக கூறினார்.இதற்காக தன்னிடம் இருந்து, 71.63 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவச் சீட்டு வாங்கி தராமலும், பணத்தைத் திருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், தனிப்படை போலீசார், வடலபள்ளி விஜயகுமார், 39, என்பவர் ஜெயச்சந்திரன் உட்பட ஆந்திராவில் மேலும் சிலரிடமும் மருத்துவக் கல்லுாரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.