தந்தை, மகன் ௶லாக்கப் மரணம் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை :பத்து ரூபாய் இயக்கம் சார்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு, விரைவில் தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாராயணப்பன் தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், துாத்துக்குடி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், ஒரு குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்குதல், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், பத்து ரூபாய் இயக்க மாநில செயலர் பாஸ்கர் கூறியதாவது:லாக்கப் கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட, சாத்தான்குளம் போலீசாருக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, பாதி சம்பளத்தை அரசு வழங்கி வருகிறது. சம்பளம் வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்.சம்பளம் வழங்குவதை நிறுத்தினால் தான், வரும் காலங்களில் இது போன்ற லாக்கப் மரணங்கள் நடக்காமல் தடுக்கப்படும். கணவரையும், மகனையும், தகப்பனையும் பறி கொடுத்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மீளாத் துயரத்தில் உள்ளனர். ஆனால், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. மக்களின் வரிப்பணத்தை குற்றவாளிகளுக்கு சம்பளமாக கொடுக்கும், இந்நிலை மாற வேண்டும். அதை செய்யும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அனைவருக்கும் சம நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், பத்து ரூபாய் இயக்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.