உள்ளூர் செய்திகள்

மண்டையில மரம் மொளச்சவ!

கடந்த, 1990ல், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பு படித்த போது கொண்டிருந்தேன். எங்கள் பள்ளியில், 'கலாசார விழா' நடை பெற்றது. அதில் என் தோழியர் பலரும் நடன நிகழ்ச்சி, நாடகங்களில் பங்கேற்றனர்.அதை கண்டுகளிக்க நானும், என் தோழியர் சிலரும் புறப்பட்டு கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் சித்தியின், மூன்று வயது மகள் வாணி, 'நானும் வருவேன்' என்று அடம் பிடித்தாள். சித்தியும், அவளை அழைத்து போக கூறினார். சரியாக, 6:00 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. மிகவும் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த நான், சித்தி மகள் வாணியை கவனிக்க தவறி விட்டேன்.சரியாக, 8:00 மணியளவில் நிகழ்ச்சி முடிந்தது. வாணியை காணவில்லை. நாங்கள் மிகவும் பதறியபடி பள்ளி வளாகம் முழுவதும், தேடி அலைந்தோம். அழுது கொண்டே, சித்தியிடம் தகவல் தெரிவிப்பதற்காக, வீட்டிற்கு சென்றேன். அங்கே, வாணிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தார் சித்தி. எனக்கு வந்ததே ஆத்திரம்.மிகுந்த கோபத்தோடு, 'வாணி எங்கடி போன... யார் கூட வீட்டிற்கு வந்த' என, அவளை அடிக்க கை ஓங்கினேன். அவள் மிகவும் பயந்து, அழுது கொண்டே, 'நம்ம பக்கத்து வீட்ல இருக்காங்களே... மண்டைல மரம் மொளைச்ச அக்கா, அவங்க கூட தான் வந்தேன்' என்றாள்.எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. 'மண்டையில எப்படி மரம் முளைக்கும்' என்று கேட்க, 'ஆமா மண்டைல மரம் மொளைச்சபடி மேடையில கூட ஆடுனாங்கல்ல' என்றாள்.அப்போது தான் புரிந்தது என் பக்கத்து வீட்டு தோழி, 'கலாசார விழா'வில், ஊர் திருவிழா நடனத்தில், தலையில், முளைப்பாரி வைத்து ஆடியதை தான் அப்படி சொல்கிறாள் என்று. அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். இப்போதும் என் தோழி கவிதாவை பார்த்தால், பேர் சொல்லி அழைப்பதில்லை. 'மண்டையில மரம் மொளைச்சவளே...' என்று தான் கூப்பிடுவோம்.இன்று, அவள் கணவர் அவளை திட்டும் போது, மரமண்டை என்று தான் திட்டுவார். இந்த விஷயத்தை அவரிடம் நாங்கள் கூறியதும், 'அப்ப நான் மரமண்டைன்னு கூப்பிடுறது தப்பு இல்ல' என்று சொல்லி அவரும் விழுந்து விழுந்து சிரித்தார்.- ப.சண்முகாதேவி, அல்லிநகரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !