புரதச்சத்து அதிகம் நிறைந்த கூம்பு வடிவ முட்டை பழம்
கூம்பு வடிவ முட்டை பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:மணல் கலந்த களிமண் நிலத்தில், முட்டை பழம் சாகுபடி செய்துள்ளேன். உருளை, கூம்பு ஆகிய இரு விதமான வடிவில் உள்ளன.உருளை வடிவில் இருக்கும் முட்டை பழம், கேரளாவில் அதிகமாக சாகுபடி செய்யும் புரத சத்து நிறைந்த பழ ரகமாகும். இந்த பழச்செடிகளை மாடி தோட்டம் மற்றும் நிலங்களிலும் வளர்க்கலாம். இரண்டு ஆண்டுகளில், முட்டை பழங்கள் அறுவடைக்கு வரும்.குறிப்பாக, கூம்பு வடிவ முட்டை பழ செடி காய்கள் பச்சை நிறத்திலும், பழம் இள மஞ்சள் நிறத்திலும் காணப்படும். பெயர் மட்டுமே முட்டை பழம். ஆனால், வாசனை நிறைந்த பழம்.ஒரு முறை முட்டை பழச் செடி நட்டு விட்டால் போதும். ஆண்டு முழுதும், பழம் மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்த பழத்திற்கு சீசன் இல்லை. ஒரு புறம் காய்கள் காய்க்கும். மற்றொரு புறம் பழங்கள் பழுத்துக் கொண்டே இருக்கும்.இந்த பழங்களில், அதிக புரதச்சத்து நிறைந்து இருப்பதால், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம். தொடர்ந்து, முட்டை பழம் சாப்பிடுவோருக்கு, உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைத்து, உடல் வலிமை பெற வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,94441 20032.