மிளகாயில் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை
தமிழகத்தின் முக்கிய வணிகப் பயிரான மிளகாய் 51ஆயிரத்து 536 எக்டேரில் சாகுபடியாகி 19 ஆயிரத்து 830 டன் மிளகாய் வற்றல் உற்பத்தியாகிறது. திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சராசரியாக எக்டேருக்கு 384 கிலோ வற்றல் மகசூல் கிடைக்கிறது. மிளகாயை தாக்கும் நோய்களில் முக்கியமானது 'கொல்லிட்டோட்ரைக்கம் காப்சிசை' பூசணங்களால் வரக்கூடிய 'ஆந்த்ராக்னோஸ்'. நுனிக்கருகல், பழ அழுகல், பூ உதிர்தல், இலைப்புள்ளி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். நோயின் அறிகுறிகள் நுனிக்கருகல் அறிகுறி கிளைகள் நுனியிலிருந்து ஆரம்பித்து பின்னோக்கி கருக ஆரம்பிக்கும். நாளடைவில் ஒரு சில கிளைகள் அல்லது செடியின் மேற்பாகம் முழுவதும் கரிந்து காய்ந்து விடும். கிளைகள் ஈரக்கசிவுடன் பழுப்பு நிறத்தில் காணப்படும். சில நாட்களில் இப்பகுதி சாம்பல் கலந்த வெண்மை அல்லது வைக்கோல் நிறத்தில் மாறும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது சில கிளைகள் அல்லது செடி முழுவதும் மடிந்து விடும். நோய் தாக்காத கிளைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரம் குறைந்த காய்கள் தோன்றும். நோய் தாக்கிய இலைகளில் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் நீரில் நனைந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்றிணைந்து இலைகளை உதிரச் செய்யும். நோயினால் பாதிக்கப்பட்ட பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடும். பூக்காம்புகள் சுருங்கி பூங்கொத்து வாடி விடும். பழங்களில் அழுகல் அறிகுறி தென்படும். ஒன்றிரண்டு சிறிய கரிய நிறப்புள்ளிகள் தோலின் மேல் தோன்றும். இவை விரிவடைந்து நீள்வட்ட வடிவ புள்ளிகளாக மாறும். புள்ளிகள் உட்குழிந்தும் கருமை கலந்த சாம்பல் அல்லது வைக்கோல் நிறமாகவும் புள்ளியைச் சுற்றி ஒரு மெல்லிய கருமை நிற வளையம் காணப்படும். பழங்களினுள்ளும் விதைகளின் மேலும் பூசண வளர்ச்சி காணப்படும். நோய்த் தாக்கப்பட்ட பழங்கள் எளிதில் உதிர்ந்து விடும். நிலத்தில் கிடக்கும் நோய் தாக்கிய இலைகள், பழங்கள், செடியின் பாகங்களில் இப்பூசணம் நீண்ட காலம் உயிர்வாழும். தாக்கப்பட்ட பழங்களிலுள்ள விதைகள் மூலமாகவும் காற்று, மழைத்துளிகள் மூலம் நோய் வேகமாகப் பரவும். பல நாட்கள் அதிக பனி பெய்யும் போது நோயின் தீவிரம் அதிகமாகும். டிசம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யும் பயிர்களை தாக்கி சேதப்படுத்துகிறது. கட்டுப்படுத்துவது எப்படி நோய் தாக்காத தரமானப் பழங்களிலிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் மண்ணில் நோய்க் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். சரியான இடைவெளியில் நடவு செய்வதால் பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், காற்றின் ஈரப்பதம் சரியான அளவில் கிடைப்பதால் நோய்ப் பரவல் குறையும். நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நோய் தாக்கிய பழங்கள், இலை, கிளைகளை அகற்றி எரிக்க வேண்டும். நோய் தாக்கிய பழங்களை தனியாக அறுவடை செய்து சேமித்து வைக்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது காப்டான் அல்லது 2 கிராம் செரசான் கலந்த பின் விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 300 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சினப் அல்லது மான்கோசெப் அல்லது 750 கிராம் தாமிர ஆக்ஸிகுளோரைட் கலந்து15 நாட்கள் இடைவெளியில் 3 முதல் 4 முறை தெளிக்க வேண்டும். -பேராசிரியர்கள் சுதின்ராஜ், சோலைமலை எபனேசர் பாபு ராஜன், சஞ்சீவ்குமார் பாக்கியாத்து சாலிகா வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி துாத்துக்குடி - 628 501அலைபேசி: 94420 29913