கரோட்டின் சத்து நிறைந்த கர்நாடகா சிவப்பு நிற பலா
கர்நாடகா சிவப்பு நிற பலா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், கர்நாடகா சிவப்பு நிற பலா மரங்களை, நம்மூர் மண்ணில் சாகுபடி செய்யலாம். இது, மூன்று ஆண்டுகளில் விளைச்சல் தரக்கூடிய ரகமாகும். இந்த பலா செடிகளை, தண்ணீர் தேங்காத மேட்டுப் பகுதிகளில் நட வேண்டும். அப்போது தான், செடிகள் சேதமாவதை தவிர்க்கலாம். மரமும் நன்றாக வளரும். கண்களுக்கு தேவையான கரோட்டின் சத்து நிறைந்திருப்பதால், இந்த சிவப்பு நிற பலாப்பழத்திற்கு, சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.குறிப்பாக, களர் உவர் நிலங்கள் மற்றும் தண்ணீர் தேங்காத அனைத்து விதமான நிலங்களில், கர்நாடகா சிவப்பு நிற பலா பழத்தை சாகுபடி செய்யலாம். மஞ்சள் நிற பலா பழங்களை காட்டிலும், இதன் வாயிலாக அதிக வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா,72005 14168.