சின்னச்சின்ன செய்திகள்
மண்புழு எருவினை பிரித்தெடுக்கும் முறை: மண்புழு உற்பத்தி முறைகள் - தொட்டிமுறை, குழி முறை, படுக்கை முறை. நன்கு மக்கிய பயிர்க்கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுவிற்கு உரமாக தருவதால் ஒரு மாதத்திலேயே மண்புழு எருவினை எடுத்து பயன்படுத்தலாம். அதே சமயம் பாதியளவு மக்கிய, சரியாக மக்காதநிலையில் உள்ள பொருட்களை உணவாக்கி கொடுத்தால் 2 மாதங்கள் கழித்துத்தான் மண்புழு எருவினைப் பெறமுடியும்.
மண்புழு எருவினை சேகரிக்க முடிவு செய்தவுடன் தொட்டியில் நீர் தெளிப்பதை 2, 3, நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும். மண்புழுக்கள் ஈரம் மிகுந்த அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். இச்சமயத்தில் நாம் மேலே பரப்பியுள்ள சிறுசிறு செங்கற்களின் இடையிடையே காணப்படும் மண்புழுவின் குருணை வடிவ கழிவுகளை சேகரிக்க வேண்டும். இக்கழிவுகளின் மீது நீர் தெளித்து ஈரத்தன்மையை பராமரிக்க வேண்டும். இக்கழிவுகளை நேரடியாக விளைநிலங்களில் இட்டு பயன்படுத்தலாம். மண்புழு எருவினை பைகளில் அடைத்து ஈரம் உலராமல் பாதுகாத்து 6 முதல் 8 மாத காலம் வரை பயன்படுத்தலாம். ஒரு கிலோ எடைக்கு சுமார் 1000 மண்புழுக்கள் இருக்கும். இவை ஒரு நாளில் பயிர்க்கழிவுகளை உண்டு 5-6 கிலோ எருவினைத் தருகின்றன. நன்கு புழுக்களை பராமரித்தால் ஒரு மாதத்திற்கு 150 கிலோ வரை எருவினை பெறலாம். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 200 கிலோ வரை எரு கிடைக்கும். கிலோ 6 முதல் 8 ரூபாய் வரை விலை போகும். நெல்லுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அசத்திக் கொண்டிருப்பவர் சேலம் மாவட்டம், நாகியம்பட்டி அப்புத்தோட்டம் கே.கருப்பணன் என்ற விவசாயி. ஏற்கனவே விவசாயி தன்னிடம் இருந்த சொட்டுநீர்க் குழாய்களை வைத்து 70 சென்ட் நிலத்தில் ஏ.டி.டி.45 ரக நெல்லுக்குதானே சொட்டுநீர் அமைத்துள்ளார். நிலத்தில் பல பயிர் சாகுபடி செய்து அவையெல்லாம் பூத்து வந்ததும் மடக்கி உழவு செய்துவிட்டு பின்னர் தொழு உரம் போட்டு பரம்படித்து நிலத்தை சமன்செய்து, நாற்றங்கால் மூலம் நாற்று தயாரித்து ஒற்றை நாற்று முறையில் ஒரு அடி இடைவெளியில் கயிறு பிடித்து நாற்று நட்டுள்ளார். பின்னர் 4 அடி இடைவெளிக்கு ஒரு குழாய் (லேட்ரல்) வருவதுபோல் 18 மி.மீ. குழாயை அமைத்து அதில் இரண்டரை அடி இடைவெளியில் ஒரு துளையிட்டு சிறிய குழாயை (மைக்ரோ டியூப்) சொருகிவைக்க வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் தலா 2 லிட்டர் சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணத்தை சொட்டுநீரில் கலந்து நிலத்துக்கு கொடுக்க வேண்டும். இதுதவிர வேறு எந்த இடுபொருளும் கொடுக்கவில்லை. கோனோவீடரை கிழக்கு மேற்காக மட்டும் உருட்டி களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் சொட்டுநீர் குழாய்க்கு எந்த பாதிப்பும் வராது. விதை முளைத்ததிலிருந்து சுமார் 50 நாட்களில் பூ கரு உருவாகும். அதிலிருந்து 30 நாட்களில் பூ பூக்கும். அதிலிருந்து கதிர் முதிர்ச்சி அடைய 30 நாட்கள் ஆகும். வேர் பிடிக்கும் தருணம், பூக்கரு உண்டாகும் சமயம், பூக்கும் தருணம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூலில் பெரிய பாதிப்பு இருக்கும். மற்ற சமயங்களில் காய்ச்சலும் பாய்ச்சலும் இருந்தாலே போதுமானது. அரை மணி நேரம் பாய்ந்தாலே நிலம் ஈரமாகிவிடும். வழக்கமான முறையில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் தண்ணீரை வைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 3 ஏக்கர் சாகுபடி செய்யலாம். வழக்கமான முறையில் 70 சென்டில் 20 மூடை (70 கிலோ) மகசூல் எடுப்பார். சொட்டுநீர் பாசனம் மூலம் கூடுதலாக 9 மூடை நெல் கிடைத்துள்ளது. அறுவடைக்கு அடுத்த நாளே குழாய்களை சுருட்டி வைத்துவிட்டு உழவு ஓட்டிவிடலாம் என்கிறார் விவசாயி. தொடர்புக்கு: கே.கருப்பண்ணன், 97869 81299 (தகவல்: பசுமை விகடன், 25.6.10)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.