பிரதமர் - இ - டிரைவ் திட்டத்தின் கீழ் பி.எம்.டி.சி.,க்கு 1,750 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு
பெங்களூரு: சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்காக, மத்திய அரசின், 'பிரதமர் - இ - டிரைவ்' திட்டத்தின் கீழ், பெங்களூருக்கு 1,750 மின்சார பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களை பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு, 'பிரதமர் - இ - டிரைவ்' திட்டத்தின் கீழ், மின்சார பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் வாங்க ஊக்கம் அளிக்கிறது. முதற்கட்டமாக கர்நாடகாவின் பல நகரங்களுக்கு மின்சார பஸ்கள் வழங்கப்பட்டன. தற்போது, பெங்களூருக்கு 1,750 மின்சார பஸ்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பெங்களூரில், 6,800 பி.எம்.டி.சி., பஸ்கள் இயங்கி வருகின்றன. இவைகளில் பெரும்பாலும் பழைய பஸ்கள்; அடிக்கடி பழுதாகி சாலைகளின் நடுவில் நின்று விடுகின்றன. இதனால், புதிய வழித்தடங்களுக்கு பஸ்களை இயக்குவது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர, மெட்ரோ ரயில் நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களில் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. தற்போது, புதிய மின்சார பஸ்களை பி.எம்.டி.சி.,யில் சேர்ப்பதன் மூலம், முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, டீசல் பஸ்களுக்கு பதிலாக மின்சார பஸ்களை இயக்குவதால் காற்று மாசு குறையும். இது, பி.எம்.டி.சி., வரலாற்றில், மிகப்பெரிய மின்சார பஸ் கொள்முதல் செயல்முறையாகும். குறைந்த விலையில் பயணிகளுக்கு வசதியான பயணத்தை அளிக்கும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால், பெங்களூரு, 'பசுமை நகரமாக' மாறுவதற்காகன மற்றொரு படியாக அமையும்.