கொத்தடிமையாக இருந்த 18 தொழிலாளர்கள் மீட்பு
ஹாசன்: தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக அவதிப்பட்ட, 18 தொழிலாளர்களை போலீசார் மீட்டனர். ஹாசன் மாவட்டம், ஹளேபீடின் சட்னஹள்ளி கிராமத்தில் தொழிற்சாலை ஒன்றில், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று காலை அங்கு சென்று சோதனையிட்ட ஹளேபீடு போலீசார், 18 தொழிலாளர்களை மீட்டனர். தொழிற்சாலை உரிமையாளர் நாகராஜ் என்பவர், அதிக கூலி தருவதாக ஆசை காட்டி, வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை ஹாசனுக்கு அழைத்து வந்தார். பின், அவர்களை அடைத்து வைத்து, வேலை வாங்கினார். கூலியும், உணவும் கொடுக்காமல் பணி முடிந்த பின், அனைவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்திருந்தார். வெளியே செல்லவும் அனுமதி அளிக்கவில்லை. போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த, தொழிற்சாலை உரிமையாளர் நாகராஜ், அங்கிருந்து தப்பிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை, போலீசாரிடம் விவரித்துள்ளனர்.