| ADDED : நவ 20, 2025 03:46 AM
பெங்களூரு: 'கர்நாடகாவில் 32,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களில் தீயணைப்பு கருவிகள் இல்லாமல் உள்ளன' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு ஹலசூரு கேட் பகுதியில், கடந்த அக்டோபரில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில், அந்த கட்டடத்தில் தீயணைப்பு கருவிகள் எதுவும் இல்லாததே உயிர் சேதத்திற்கு காரணம் என தெரியவந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் தீயணைப்பு கருவிகள் இருக்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியது. இருப்பினும், அரசின் அறிவுறுத்தலை அடுக்குமாடி கட்டட உரிமையாளர்கள் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதுகுறித்து, மாநில தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: அடுக்குமாடி கட்டடங்களில் தீயணைப்பு கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் அலுவலகங்களில் தீயணைப்பு கருவிகள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, தடையில்லா சான்றிதழ் வழங்குவர். இந்த சான்றிதழை பெற கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் விண்ணப்பிப்பதில்லை. தீ விபத்து குறித்த அபாயத்தை அலட்சியமாக கையாளுகின்றனர். மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர். இப்படி, கர்நாடகாவில் 32,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் இருக்கின்றன. இந்த கட்டடங்களில் தீயணைப்பு கருவிகள் கிடையாது. இங்கு வசிப்பது பாதுகாப்பற்றது. உடனடியாக தீயணைப்பு கருவிகள் உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.