பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் 85 சிறுத்தைகள் நடமாட்டம்
பெங்களூரு: பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து, வன விலங்குகள் வல்லுநர் சஞ்சய் குப்பி ஆய்வு செய்து வருகிறார்.நகரின் சுற்றுப்பகுதிகளில், 80 முதல் 85 சிறுத்தைகள் நடமாடுவது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு புறநகர்ப்பகுதிகளில், அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. சில சிறுத்தைகள் கூண்டில் சிக்கின. எத்தனை சிறுத்தைகள் நடமாடுகின்றன என்பது தெரியவில்லை.நகரின் சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, வன விலங்குகள் வல்லுநர் சஞ்சய் குப்பி தலைமையிலான, ஹொளேமத்தி நேச்சர் கவுன்டேஷன் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். கேமரா டிராப்கள் பயன்படுத்தி, தொடர்ந்து, ஓராண்டாக ஆய்வு நடந்தது.குறிப்பாக பன்னரகட்டா தேசிய பூங்கா, பி.எம்.காவல், துரஹள்ளி, துரஹள்ளிகுட்டா, சூலிகெரே, ஹெசரகட்டா, மாரசந்திரா, மண்டூர் உட்பட, 282 சதுர கி.மீ., பரப்பளவில் ஆய்வு நடந்தது. இதில் பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில் 80 முதல் 85 சிறுத்தைகள் நடமாடுவது தெரிந்தது.இவை மட்டுமின்றி, பல்வேறு விதமான அபூர்வ விலங்குகளும் கேமராவில் பதிவாகியுள்ளன. ஆய்வை முடித்து அரசிடம் வல்லுநர் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சில பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.வன விலங்குகள், அபூர்வ விலங்குகள் பாதுகாக்க வேண்டும். பி.எம்காவல், யு.எம்.காவல், ரோரிச் எஸ்டேட், குலஹள்ளி குட்டா வனப்பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.துர்கதகல், பெட்டஹள்ளிவாடே வனப்பகுதிகள், ஜ.ஐ., பாச்சஹள்ளி, எம்.மணியம்பாள் பகுதிகளை, பன்னரகட்டா தேசிய பூங்காவில் சேர்க்க வேண்டும்.முனேஸ்வரபெட்டா - பன்னரகட்டா வனவிலங்கு காரிடாரை பாதுகாக்க, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேறு இடங்களில் சிறைபிடிக்கப்பட்ட சிறுத்தைகளை, பன்னரகட்டாவுக்கு இடமாற்றுவதை நிறுத்த வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.