பா.ஜ., - எம்.பி., சுதாகருக்கு எதிராக போஸ்டர் ஒட்டும் காங்., தொண்டர்கள்
சிக்கபல்லாபூர்: மாவட்ட பஞ்சாயத்து தலைமை கணக்கு அதிகாரியின் கார் ஓட்டுநர் பாபு தற்கொலை சம்பவம், அரசியல் வடிவம் எடுக்கிறது. பா.ஜ., - எம்.பி., சுதாகர் தலித் விரோதி என, காங்கிரசார் துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது. சிக்கபல்லாபூர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை கணக்கு அதிகாரியின் கார் ஓட்டுநராக பணியாற்றியவர் பாபு, 33. இவர் இம்மாதம் 7ம் தேதியன்று, அதிகாலை அலுவலகம் வளாகத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பு கடிதம் தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் தற்கொலைக்கு, எம்.பி., சுதாகர், இவரது ஆதரவாளர்கள் நாகேஷ் மற்றும் மஞ்சுநாத் காரணம். எனக்கு அரசு வேலை கிடைக்க செய்வதாக கூறி, 25 லட்சம் ரூபாய் பெற்று கொண்டனர். வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை' என விவரித்திருந்தார். இதை தொடர்ந்து இச்சம்பவம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாபு குற்றம்சாட்டியதால் எம்.பி., சுதாகர் ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரசார் வலியுறுத்துகின்றனர். இதற்கிடை யே நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் தலைவர்களும், எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் ஆதரவாளர்களான வினய், ஹமீம் ஆகியோர், 'சுதாகர் தலித் விரோதி' என, அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை ஒட்ட முற்பட்டனர். இதை பார்த்த சுதாகரின் ஆதரவாளர்கள், துண்டு பிரசுரங்கள் ஒட்டுவதை தடுத்தனர். இது குறித்து, வீடியோவும் பதிவு செய்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் ஆதரவாளர்களை அழைத்து சென்றனர். அவப்பிரசாரம் எம்.பி., சுதாகர், தலித்துகளுக்கு எதிரானவர் என, அவப்பிரசாரம் செய்த காங்கிரசார் மீது வழக்கு பதிவு செய்யும்படி, அவரது ஆதரவாளர்களும், பா.ஜ., தொண்டர்களும் போலீசாரிடம் வலியுறுத்து வருகின்றனர். இது தொடர்பாக சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் நேற்று அளித்த பேட்டி: சிக்கபல்லாபூரில் எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த பாபு என்ற வாலிபர் தற்கொலை செய்து உள்ளார். தனது தற்கொலைக்கு சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர், அவரது ஆதரவாளர்கள் தான் நேரடி காரணம் என்று கடிதமும் எழுதி உள்ளார். இந்த விஷயத்தை பற்றி பா.ஜ., தலைவர்கள் பேசுவது இல்லை. பாபு மரணத்திற்கு பா.ஜ., தலைவர்களிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவமதிப்பு தலித் மக்களை அங்கீகரிக்கும் கட்சி பா.ஜ., என்று பெருமை பேசும் பிரதமர் மோடி, எம்.பி., சுதாகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபு தற்கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு, மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும். பெங்களூரில் மெட்ரோ ரயில் துவக்க விழாவிற்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு அழைப்பு விடுக்காமல் அவமதிப்பு செய்து உள்ளனர். பெங்களூரு நகரின் மூத்த எம்.எல்.ஏ.,க்களில் அவரும் ஒருவர். ஆனால் பெங்களூரை சாராத விஜயேந்திராவுக்கு அழைப்பு விடுத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்ரீதியாக அசோக்கை நான் விமர்சித்து பேசினாலும், அவரது நிலையை பார்த்து எனக்கு வருத்தமாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கார்கலா எம்.எல்.ஏ., சுனில்குமாருக்கு கொடுக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. சுனில்குமா ரை விட அசோக் சாமர்த்தியமான அரசியல்வாதி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.